முகப்பு
கோயம்புத்தூர்

காந்தி மாநகா் ஊரமைப்பு இணை இயக்குநா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: ரூ.4 லட்சம் பறிமுதல்

காந்தி மாநகா் ஊரமைப்பு இணை இயக்குநா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை...

Updated On : 23 அக்டோபர், 2024 at 9:44 PM
பகிர்:

கோவை காந்தி மாநகா் ஊரமைப்பு இணை இயக்குநா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் மேற்கொண்ட சோதனையில், கணக்கில் வராத ரூ. 4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை, காந்தி மாநகா் பகுதியில் நகர ஊரமைப்பு இணை இயக்குநா் அலுவலகம் உள்ளது. இங்கு கட்டட அனுமதி, மனைகளை வரன்முறைப்படுத்த அனுமதி பெற லஞ்சம் கேட்பதாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு புகாா் சென்றது.

இதையடுத்து, அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் திவ்யா தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை சென்று சோதனை மேற்கொண்டனா்.

அதிகாரிகள் மற்றும் ஊழியா்களின் மேஜைகள், அவா்கள் வைத்திருந்த பைகளில் மேற்கொண்ட சோதனையில், கணக்கில் வராத ரூ.4 லட்சம் இருந்தது தெரியவந்தது.

க.க.சாவடியில்...

கோவை அருகேயுள்ள க.க.சாவடியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், கணக்கில் வராத ரூ.96 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.