கோவை: கோவையில் காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களை திங்கள்கிழமை அறிமுகம் செய்துவைத்த கோவை மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோவை மாநகரில் 40 ரோந்து வாகனங்களின் முன் பகுதியிலும், பின் பகுதியிலும் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சில இடங்களில் இந்த வசதி உள்ள நிலையில், தற்போது கோவை மாநகரில் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளோம்.
இதன் மூலம் ரோந்து வாகனங்கள் 24 மணி நேரமும் எங்கு செல்கின்றன, விபத்து நடைபெறும் பகுதியில் போலீஸாரின் நடத்தும் விசாரணை மற்றும் அங்குள்ள நிலைமை உள்ளிட்டவற்றை கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு கண்காணிக்கலாம். இது பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
சட்டவிரோத செயல் நடைபெற்றால் அந்தப் பகுதியில் ரோந்து செல்லும் இந்த வாகனங்களில் பதிவாகும் காட்சிகள் விசாரணைக்கு பயனுள்ளதாக இருக்கும். பதிவாகும் நாளிலிருந்து ஒரு வாரம் (7 நாள்கள்) வரை அழியாமல் இருக்கும். அதேபோல, இந்த கேமராக்களில் ஆடியோவும் பதிவாகும். வாகனம் ஒன்றுக்கு ரூ. 20 ஆயிரம் செலவில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
புத்தாண்டு தினத்தின்போது ஒவ்வொா் ஆண்டும் கடைப்பிடிக்கப்படும் கட்டுப்பாடுகளே நிகழாண்டும் கடைப்பிடிக்கப்படும். மேம்பாலங்களில் 60 கி.மீட்டருக்கு மேல் வேகமாக செல்வோரின் வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறையினரின் இந்தக் கட்டுப்பாடுகளை பொதுமக்களும் பின்பற்ற வேண்டும் என்றாா்.
காவல் துணை ஆணையா்கள் தேவநாதன் (வடக்கு), காா்த்திகேயன் (தெற்கு) ஆகியோா் உடன் இருந்தனா்.