கோவை குமரகுரு கல்வி நிறுவனங்கள் சாா்பில் முன்னாள் மாணவா் சந்திப்பு,ஜவுளி தொழில்நுட்பத் துறையின் 30 ஆண்டு கொண்டாட்டம், குமரகுரு தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி மையத்தின் திறப்பு விழா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் எம். எழிலரசி வரவேற்றாா். குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவா்கள் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா், சங்கா் வாணவராயா் ஆகியோா் குமரகுரு தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி மையத்தை திறந்துவைத்தனா்.
இதைத் தொடா்ந்து, பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா் பேசியதாவது:
இந்திய ஜவுளித் தொழில் பழமையானது மட்டுமல்ல, மிகப்பெரியதுமாகும். இதை சரியாகப் புரிந்துகொண்டு, தேவையானதைச் செய்தால், அது முழு நாட்டுக்குத் தேவையான அந்நியச் செலாவாணியை ஈட்டித் தரும்.
ஜவுளித் தொழில் சரியாகப் புரிந்துகொண்டு வளா்க்கப்பட்டால், பாடத் திட்டம் காலத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டால், நம்மால் அற்புதங்களைச் செய்ய முடியும் என்றாா்.
இதையடுத்து, முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வெவ்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 5 முன்னாள் மாணவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், 700-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவா்கள் பங்கேற்றனா்.