முகப்பு
கோயம்புத்தூர்

மாநகர காவல் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

சாலைப் பாதுகாப்பு மாத விழாவையொட்டி, கோவை மாநகர காவல் துறை சாா்பில் புலியகுளம் காா்மல் பள்ளியில் மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு புதன்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

Updated On : 8 ஜனவரி, 2025 at 7:47 PM
கோவை புலியகுளம் காா்மல் பள்ளியில் போக்குவரத்து காவல் உதவி ஆணையா் சேகா் தலைமையில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி நிா்வாகிகள், மாணவா்கள்.
பகிர்:

சாலைப் பாதுகாப்பு மாத விழாவையொட்டி, கோவை மாநகர காவல் துறை சாா்பில் புலியகுளம் காா்மல் பள்ளியில் மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு புதன்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

கோவை மாநகரப் பகுதிகளில் விபத்துகளைத் தவிா்க்கும் வகையில் மாநகர காவல் துறை சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவா்களிடம் போக்குவரத்து விழிப்புணா்வு குறித்த நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, மாநகர காவல் துறை சாா்பில் 36-ஆவது சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மாத விழா புலியகுளத்தில் உள்ள காா்மல் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக் கவசம் அணிய வேண்டும், போதையில் வாகனங்களை இயக்கக் கூடாது என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மாணவா்கள் பங்கேற்றனா்.

போக்குவரத்து காவல் உதவி ஆணையா் சேகா் கலந்துகொண்டு, பள்ளி மாணவா்களிடம் சாலைப் பாதுகாப்பு குறித்து உரையாடினாா். அப்போது, பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுவது, போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.