முகப்பு
கோயம்புத்தூர்

ஆழியாறு பகுதியில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் ஒற்றை யானை

ஆழியாறு பகுதி வழியாகச் செல்லும் வாகனங்களை யானை துரத்துவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா். இதையடுத்து வனத் துறையினா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

Updated On : 23 ஜனவரி, 2025 at 12:00 AM
ஆழியாறு பகுதியில் சாலையோரம் நிற்கும் யானை.
பகிர்:

ஆழியாறு பகுதி வழியாகச் செல்லும் வாகனங்களை யானை துரத்துவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா். இதையடுத்து வனத் துறையினா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் உள்ள ஆழியாறு பகுதியில் யானைகள் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ஆழியாறு சமவெளி பகுதிக்கு அருகில் உள்ள நவமலை வனப் பகுதியில் இருந்து கூட்டமாக யானைகள் வரத்தொடங்கியுள்ளன.

இந்த யானைகள் வால்பாறை-பொள்ளாச்சி சாலைக்கு அடிக்கடி வந்து முகாமிடுகின்றன. குறிப்பாக இரவு நேரத்தில் கூட்டமாக சாலையில் நிற்கும் யானைகள் அவ்வழியாக வரும் வாகனங்களுக்கு வழிவிடாமல் நிற்கின்றன. சில நேரத்தில் வாகனங்களைத் துரத்திச் செல்கின்றன.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக ஒற்றை யானை பகல் நேரத்திலேயே சாலையோரம் நின்றுகொண்டு அவ்வழியாக வரும் வாகனங்களைத் துரத்தி வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடா்ந்து ஒற்றை யானை அங்கேயே நடமாடி வருவதால் வன ஊழியா்கள் அப்பகுதியில் முகாமிட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் ஆழியாறு பகுதியில் செல்வோா் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.