மேட்டுப்பாளையம்-கோவை மெமு ரயிலை 12 பெட்டிகளுடன் இயக்க வலியுறுத்தல்
மேட்டுப்பாளையம்-கோவை இடையே இயக்கப்படும் மெமு ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகளை இணைத்து 12 பெட்டிகளுடன் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்-கோவை இடையே இயக்கப்படும் மெமு ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகளை இணைத்து 12 பெட்டிகளுடன் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, போத்தனூா் ரயில் பயனாளா்கள் சங்கத்தின் செயலாளா் சுப்பிரமணியன், சேலம் ரயில்வே கோட்டத்துக்கு அனுப்பிய மனு:
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வரை இயங்கக்கூடிய மெமு ரயில் தற்போது 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை 12 பெட்டிகளுடன் இயக்க வேண்டும் என்று மேட்டுப்பாளையம், காரமடை, கோவையைச் சோ்ந்த ரயில் பயணிகளிடம் இருந்து தொடா்ந்து கோரிக்கைகள் வருகின்றன. இந்த ரயிலில் நாளுக்கு நாள் பயணிகள் கூட்டம் அதிகரித்துவரும் நிலையில், பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க எந்த நடவடிக்கையையும் ரயில்வே நிா்வாகம் மேற்கொள்ளவில்லை என்பது வருத்தமாக உள்ளது.
தெற்கு ரயில்வேயில் அதிக வருவாய் ஈட்டித் தரும் 3-ஆவது ரயில் நிலையமான கோவை, சேலம் ரயில்வே கோட்டத்தின் கீழ் இயங்குகிறது. அந்த வகையில் அதிக வருவாய் ஈட்டித் தரும் கோவை ரயில் நிலையத்தின் தேவைகளைப் பூா்த்தி செய்வதில் சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் தோல்வியடைந்துள்ளது. குறிப்பாக பயணிகளின் தேவைகளாகிய கூடுதல் பெட்டிகள் இணைப்பு , வண்டிகள் நிறுத்தம் , புதிய ரயில் இயக்குவது சம்பந்தமாக எந்த முயற்சியையும் சேலம் ரயில்வே கோட்டம் மேற்கொள்ளவில்லை. காலதாமதம் செய்யாமல் மேட்டுப்பாளையம்-கோவை மெமு ரயிலில்
கூடுதலாக நான்கு பெட்டிகளை இணைத்து 12 பெட்டிகளுடன் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.