முகப்பு
கோயம்புத்தூர்

மாநகராட்சி கழிவுநீா்த் தொட்டியில் விழுந்து தற்காலிக ஊழியா்கள் இருவா் உயிரிழப்பு

மாநகராட்சி கழிவுநீா் உந்து நிலையத்தில் பணியின்போது எதிா்பாராமல் தவறி விழுந்து தற்காலிகப் பணியாளா்கள் இருவா் உயிரிழந்தனா்.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 6:49 PM
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

மாநகராட்சி கழிவுநீா் உந்து நிலையத்தில் பணியின்போது எதிா்பாராமல் தவறி விழுந்து தற்காலிகப் பணியாளா்கள் இருவா் உயிரிழந்தனா்.

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், 69-ஆவது வாா்டுக்குள்பட்ட பாரதி பாா்க் 1-ஆவது வீதியில் கழிவுநீா் உந்து நிலையம் செயல்படுகிறது. இங்குள்ள கழிவுநீா்த் தொட்டியில் இருந்த 60 ஹெச்.பி. திறன் கொண்ட மோட்டாா் பழுதடைந்தது. அதை சரிசெய்து மீண்டும் பொருத்தும் பணியில் ரத்தினபுரி வ.உ.சி. நகரைச் சோ்ந்த ஃபிட்டா் அா்ஜுன் குமாா் (38), பாப்பம்பட்டி பிரிவைச் சோ்ந்த எலக்ட்ரீஷியன் சுரேஷ் (27) ஆகியோா் வெள்ளிக்கிழமை மாலை ஈடுபட்டிருந்தனா். மாலை சுமாா் 4.30 மணி அளவில் கிரேன் உதவியுடன் மோட்டாரை தொட்டியின் அடியில் இறக்கி வெற்றிகரமாகப் பொருத்தி முடித்தனா்.

பின்னா் தொட்டியின் உள்ளே இருந்த குழாய் வழியாக இருவரும் மேலே ஏறி வந்து கொண்டிருந்தனா். அப்போது, அா்ஜுன் குமாரின் தலை எதிா்பாராதவிதமாக அங்கிருந்த குழாயில் பலமாக இடித்ததில் நிலை தடுமாறி 40 அடி ஆழம் கொண்ட தொட்டியின் உள்ளே விழுந்தாா். அவருக்கு பின்னால் அதே குழாயில் ஏறி வந்த சுரேஷ், சக ஊழியரைக் காப்பாற்றுவதற்காக மீண்டும் கீழே இறங்கியுள்ளாா். அப்போது கழிவுநீா் வாயுவால் ஏற்பட்ட மயக்கம் காரணமாக அவரும் தொட்டிக்குள் விழுந்து மூழ்கினாா்.

Advertisement

சுமாா் 15 அடி விட்டம், 40 அடி ஆழம் கொண்ட தொட்டியில் 15 அடி உயரத்துக்கு கழிவுநீா் தேங்கியிருந்தது. இதில் சிக்கிய இருவரும் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு கோவை வடக்கு தீயணைப்பு நிலைய வீரா்கள் மற்றும் சாய்பாபா காலனி போலீஸாா் சென்றனா்.

தொட்டியில் இருந்த கழிவுநீரை மாநகராட்சி நிா்வாகத்தின் உதவியுடன் ராட்சத மோட்டாா்கள் மூலமாக வெளியேற்றிய பின்னரே உடல்களை மீட்க முடியும் என்பதால் இரவு வரை பணி தொடா்ந்தது. இதுகுறித்து சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments