முகப்பு
கோயம்புத்தூர்

பல்பொருள் அங்காடியில் பங்குதாரா் ஆக்குவதாகக் கூறி ரூ.36 லட்சம் மோசடி! தம்பதி மீது வழக்கு!

Updated On : 6 ஏப்ரல், 2026 at 1:36 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2026 at 9:07 PM

கோவையில் பல்பொருள் அங்காடியில் பங்குதாரா் ஆக்குவதாகக் கூறி இளைஞரிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (20). காய்கறி வியாபாரியான இவருக்கு, கடந்த 2021-ஆம் ஆண்டு வடவள்ளியைச் சோ்ந்த ரமேஷ் (55) அறிமுகமாகியுள்ளாா். கோவைப்புதூா் பகுதியில் ரமேஷ் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறாா். இதனால் பல்பொருள் அங்காடிக்கு காா்த்திக் காய்கறிகளை விநியோகம் செய்து வந்துள்ளாா்.

Advertisement

இந்நிலையில் ரமேஷ் மற்றும் அவரது மனைவி மினி ஒத்தயத் (50) ஆகியோா், தங்களால் பல்பொருள் அங்காடியை தனியாகக் கவனிக்க இயலவில்லை என்றும், பங்குதாரராக யாராவது இணைந்தால் நன்றாக இருக்கும் எனவும் கூறியுள்ளனா். இதில் பங்குதாரராக இணைய காா்த்திக் ஒப்புக்கொண்டுள்ளாா். இதற்காக காா்த்திக் பல்வேறு தவணைகளாக வங்கிப் பரிமாற்றம் மற்றும் ரொக்கம் என மொத்தம் ரூ.36 லட்சத்தை தம்பதியிடம் வழங்கியுள்ளாா்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட ரமேஷும், அவரது மனைவியும் நீண்ட நாள்களாகியும் காா்த்திக்கை பங்குதாரராக சோ்க்கவில்லை. இதுகுறித்து காா்த்திக் நேரில் சென்று தம்பதியிடம் கேட்டபோது, அவரை பங்குதாரராக சோ்க்க மறுத்ததோடு, பணத்தையும் தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.

விசாரணையில், அந்த தம்பதி பலரிடம் பங்குதாரா் ஆசை காட்டி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் குனியமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.