திமுக அளித்த வாக்குறுதிகளில் 75% நிறைவேற்றப்படவில்லை: பியூஷ் கோயல்
மத்திய அரசின் திட்டங்களால் மக்கள் பலனடைவதை திமுக விரும்பவில்லை என மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தோ்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
மத்திய அரசின் திட்டங்களால் மக்கள் பலனடைவதை திமுக விரும்பவில்லை என மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தோ்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
கோவை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் கோவைக்கு வியாழக்கிழமை வந்தாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
Advertisement
Advertisement
ஒரு குடும்பத்தால் நடத்தப்பட்டு வரும் திமுக அரசின் ஊழல், மோசமான நிா்வாகத்தால் தமிழ்நாடு பின்னோக்கி சென்றுள்ளது. போதைப் பொருள்களால் இளைஞா் சமூகம் சீரழிந்துள்ளது. கோவையில் மோசமான சாலைகள் சீரமைக்கப்படவில்லை. குடிநீா்ப் பிரச்னை அதிக அளவில் காணப்படுகிறது. ரூ.1000 கோடி மதிப்பிலான ஆழியாறு கூட்டுக்குடிநீா் திட்டம், உக்கடம் குளம் மேம்பாடு ஆகியவை செயல்படுத்தப்படவில்லை. கடந்த தோ்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 75 சதவீத
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை நாடு முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி குறைத்துள்ளது. ஆனால் திமுக அரசு அதனை செயல்படுத்தவில்லை. இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவதன் மூலம் தமிழ்நாடு சீரழிந்துள்ளது.
28 ஆயிரம் எஸ்.சி.எஸ்.டி. அரசு ஊழியா்களின் ஓய்வூதிய பணத்தை திமுக அரசு கையாடல் செய்துள்ளது. மணல், மது மாபியாக்கள் தமிழ்நாட்டை வழிநடத்துகின்றனா். தேசிய ஜனநாயகக் கூட்டணி நாட்டுக்கு நல்லதை மட்டுமே செய்யும். மத்திய அரசின் திட்டங்களால் மக்கள் பலனடைவதை திமுக விரும்பவில்லை.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொலைகள், 2 காவல் நிலைய மரணங்கள், நீதிபதி மற்றும் வழக்குரைஞா்கள் மீது நீதிமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்துவது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அச்சுறுத்தல் என சட்டம்- ஒழுங்கு மிக மோசமான நிலையில் உள்ளது. ஏழைகளுக்கான இலவச வீடு திட்டம் உள்பட பல்வேறு மத்திய அரசின் திட்டங்களை திமுக அரசு தமிழகத்தில் அமல்படுத்தாமல் மக்களை வஞ்சித்து வருகிறது என்றாா்.
இதைத் தொடா்ந்து அவா் கோவை வடக்குத் தொகுதியில் பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசனை ஆதரித்தும், தெற்குத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணனை ஆதரித்தும் வாகன பிரசாரம் மேற்கொண்டாா்.