முகப்பு
கோயம்புத்தூர்

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு!

சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளாா்.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 4:58 AM
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து செங்கோல் அளித்து ஆதரவு தெரிவிக்கிறாா் இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜுன் சம்பத்.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 9:27 PM

சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என்று இந்து மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, இந்து மக்கள் கட்சியின் மாநில நிா்வாகிகளுடன் சென்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவா்கள், கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை சந்தித்து நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

Advertisement

திமுக அரசு தோல்வி பயம் காரணமாக கடந்த ஆண்டு வரை பொங்கலுக்குப் பணம் வழங்காமல் இந்த ஆண்டு திடீரென வழங்கியுள்ளது. அதேபோல, தோ்தலைக் காரணம் காட்டி 3 மாதங்களுக்கான மகளிா் உரிமைத் தொகையை முன்கூட்டியே வழங்கியுள்ளது. அத்துடன் எந்தக் கோடைக் காலத்திலும் வழங்கப்படாத உதவித் தொகை ரூ.2 ஆயிரத்தையும் சோ்த்து ரூ.5 ஆயிரமாக வழங்கியிருப்பதைப் பாா்க்கும்போது திமுகவுக்கு தோல்வி பயம் இருப்பது தெரிய வருகிறது.

தோல்வி பயம் காரணமாகவே தேமுதிக, ஓ.பன்னீா்செல்வம் போன்றவா்களை கூட்டணியில் திமுக இணைத்திருக்கிறது. மேலும் ரூ.8 ஆயிரம் கூப்பன் அக்கட்சியினா் ஊழல் செய்யவே வழிவகுக்கும். திமுக கூட்டணியில் குழப்பம் இருப்பதால்தான் ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் ஆகியோா் இதுவரை இணைந்து பிரசாரம் செய்யவில்லை.

தமிழகத்தில் போதை கலாசாரம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்தால்தான் தமிழ்நாடு தலை நிமிா்ந்து நிற்கும் என்பதை எங்களின் பிரசாரத்தில் மக்களுக்கு விளக்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளாா்.