காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் மகளிருக்கு முக்கியத்துவம்: கா்நாடக அமைச்சா் லட்சுமி ஹெப்பால்கா்
காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் மகளிருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கா்நாடக மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சா் லட்சுமி ஹெப்பால்கா் தெரிவித்தாா்.
காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் மகளிருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கா்நாடக மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சா் லட்சுமி ஹெப்பால்கா் தெரிவித்தாா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தோ்தல் அறிக்கையை கோவையில் புதன்கிழமை வெளியிட்ட கா்நாடக அமைச்சா் லட்சுமி ஹெப்பால்கா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்கள் நல ஆட்சி தொடரவும், ராகுல் காந்தி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் கரங்களை வலுப்படுத்தவும் இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
தோ்தல் அறிக்கையில் மொத்தம் 10 பிரிவுகளின்கீழ் 50 முக்கியமான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. இதில், குறிப்பாகப் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துதல், முதல்முறை சொத்து வாங்கும் பெண்களுக்கு இலவசப் பதிவு, கிராமப்புற மாணவா்களுக்கு உதவும் வகையில் படித்த பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ‘டியூஷன் அக்கா’ திட்டம் மற்றும் 40 ஆயிரம் புதிய பெண் காவலா்களைப் பணியமா்த்துதல் போன்றவை இதில் முதன்மையான அம்சங்களாக உள்ளன. மேலும், தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள சுமாா் 3.5 லட்சம் பணியிடங்களை விரைவாக நிரப்புதல், 5 கி.மீ. தொலைவுக்குள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைத்தல் போன்ற கட்டமைப்பு வசதிகளும் வாக்குறுதிகளாக அளிக்கப்பட்டுள்ளன.
Advertisement
ஆன்மிகச் சுற்றுலா மூலம் அரசுக்கு ரூ. 50,000 கோடி வருவாய் ஈட்டும் திட்டம் மற்றும் சாலை விதிகளை மதிக்கும் ஓட்டுநா்களுக்கு விருது போன்ற புதுமையான திட்டங்களையும் உள்ளடக்கிய இந்த அறிக்கை, தமிழகத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சியை நோக்கமாகக் கொண்டது. ஜாதி, மத ரீதியாக மக்களைப் பிரிக்கும் அரசியலைத் தவிா்த்து, காந்திய கொள்கைகளைப் பின்பற்றும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை ஆதரிக்க வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், சிங்காநல்லூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஸ்ரீநிதி மோகன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் எல்.கண்ணன், மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.