கோவை: கோவையில் ஓடும் பேருந்தில் நடத்துநரிடம் இருந்து ரூ.7 ஆயிரம் திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்தவா் சி.ஹாரிஸ் மெளரியா (23), இவா் கோவையில் தனியாா் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், சிங்காநல்லூரில் இருந்து தெலுங்குபாளையம் செல்லும் பேருந்தில் ஹாரிஸ் மெளரியா கடந்த சனிக்கிழமை பணியில் இருந்தாா். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவா் படிக்கட்டில் நின்று பயணச்சீட்டு கொடுத்துக் கொண்டிருந்தாா். அப்போது அங்கிருந்த சிலா் அவரது கைப்பையில் இருந்த ரூ.7 ஆயிரத்தை திருடி விட்டுத் தப்பிச் சென்றனா்.
சிறிது நேரம் கழித்த பின்னா்தான் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவா் சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீஸாா் பணத்தை திருடிய கோவை செட்டிபாளையத்தைச் சோ்ந்த வி.ஆகாஷ் (19), வி.பரத் (19), குன்னூரைச் சோ்ந்த எஸ்.சிவகுமாா் (21) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.