மாநகராட்சியில் ரூ.3.40 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகள்! கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்
கோவை, பிப். 14: கோவை வடக்கு மற்றும் மேற்கு மண்டலங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 2 பணிகளை கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் சனிக்கிழமை பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தாா்.
கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம் 12-ஆவது வாா்டுக்கு உள்பட்ட உடையாம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.1.46 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 8 வகுப்பறை கட்டடங்கள், மேற்கு மண்டலம் 35-ஆவது வாா்டு இடையா்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.1.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் கட்டடங்கள் என மொத்தம் ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை கணபதி.ப.ராஜ்குமாா் திறந்துவைத்தாா். மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி, ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து, வடக்கு மண்டலம், 14ஆவது வாா்டு, மேட்டுப்பாளையம் சாலை, வி.கே.எஸ்.நகா் பகுதியில் தமிழ்நாடு நிலையான நகா்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.1.69 கோடி மதிப்பீட்டில், சாலை புதுப்பித்தல் பணியை தொடங்கிவைத்த மக்களவை உறுப்பினா், தெற்கு மண்டலத்தில் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் 26 சாலைகள், கிழக்கு மண்டலத்தில் ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் 27 சாலைகள், மேற்கு மண்டலத்தில் ரூ.5.67 கோடி மதிப்பீட்டில் 82 சாலைகள், வடக்கு மண்டலத்தில் ரூ.2.67 கோடி மதிப்பீட்டில் 60 சாலைகள் மற்றும் மத்திய மண்டலத்தில் ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் 9 சாலைகள் சீரமைக்கும் பணிகளைத் தொடங்கிவைத்தாா்.
Advertisement
இந்நிகழ்வுகளில், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், மண்டலத் தலைவா்கள் வே.கதிா்வேல் ( வடக்கு), கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை (மேற்கு) கல்விக் குழு தலைவா் மாலதி நாகராஜ், மாநகர தலைமைப் பொறியாளா் விஜயகுமாா், உதவி ஆணையா்கள் துரைமுருகன், மகேஷ்கனகராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.