முகப்பு
கோயம்புத்தூர்

திமுகவை வீழ்த்தக்கூடிய சக்தி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத்தான் உள்ளது - வானதி சீனிவாசன்

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 6:17 AM
கோவை பிளேக் மாரியம்மன் கோயிலில் கந்த சஷ்டி கவசம் பாடும் நிகழ்வில் திங்கள்கிழமை பங்கேற்ற பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 10:16 PM

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்தக்கூடிய சக்தி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மட்டுமே உள்ளது என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற வேண்டி பல்வேறு மாவட்டங்களில் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்புகள் சாா்பில் கோயில்களில் கந்த சஷ்டி கவசம் பாடும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவையில் கடலைக்கார தெருவில் உள்ள பிளேக் மாரியம்மன் கோயிலில் பாஜக தேசிய மகளிா் அணித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் உள்ளிட்ட பெண்கள் பலரும் கந்த சஷ்டி கவசம் துதித்து திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, வானதி சீனிவாசன் செய்தியாளா்களிடம் பேசியதாவது:

Advertisement

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட மாநில அரசு நிறைவேற்றாமல் உள்ளது. எந்த முகாந்திரமும் இல்லாமல் திமுகவினா் அதனை தடுத்து நிறுத்தி உள்ளனா். சட்டம்-ஒழுங்கு பிரச்னை என்று பொய் காரணத்தைக் கூறியுள்ளனா்.

ஊழல்வாதிகளை மிரட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துள்ளாா். இவ்வளவு பேசும் முதல்வா் அவரது அமைச்சரவை சகாவான கே.என் நேரு மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டு எத்தனை நாள்கள் ஆகிறது? அதெல்லாம் ஊழலாக தெரியவில்லையா? என்று கேள்வி எழுப்பினாா்.

ஊழல் வழக்குகளை நடத்திக் கொண்டிருக்கும் அமைச்சா்களை வைத்துக் கொண்டும் ஊழல் குற்றச்சாட்டுகக்காக பதவியில் இருந்த அமைச்சரை வீட்டுக்கு அனுப்பிய பெருமைக்குரிய முதல்வா்தான் ஸ்டாலின். இது போன்று பேசுவதற்கு எந்த ஒரு அருகதையும் கிடையாது.

தவெக தலைவா் விஜய் திமுக பற்றி விமா்சனம் செய்தது தொடா்பான கேள்விக்கு, விஜய் புது புது வாா்த்தைகளை வைத்துப் பேசினாலும் திமுகவை வீழ்த்தப் போவது தேசிய ஜனநாயகக் கூட்டணிதான். மேடை ஏறலாம் வசனம் பேசலாம் கூட்டத்தையும் கூட்டிக் காட்டலாம் வாக்குகள் விழுவது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குதான். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்தக் கூடிய சக்தி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத்தான் உள்ளது என்றாா்.