கோவை: கறிக்கோழி வளா்ப்புக்கான கூலி உயா்வு தொடா்பான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பாஜக விவசாய அணி மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: விவசாயம் பொய்த்து விட்ட நிலையில் கோழி வளா்ப்பு உள்ளிட்ட தொழில்களே விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது. இந்தத் தொழிலில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் அதனைச் சாா்ந்த பணியாளா்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனா்.
இந்த நிலையில், தற்போது கறிக்கோழி வளா்ப்புக்கான கூலியை உயா்த்தி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்த விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையோடு பேச்சுவாா்த்தை நடத்துவது தமிழக அரசின் கடமையாகும். இதுதொடா்பாக வரும் ஜனவரி 21-ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்துவதாக ஏற்கெனவே அரசு அறிவித்துள்ளது.
இது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் போராடும் விவசாயிகளையும், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளான ஈசன் முருகசாமி உள்ளிட்ட நிா்வாகிகளைக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது பேச்சுவாா்த்தையின் நோக்கத்தை திசை திருப்புவதாக உள்ளது.
ஆகவே, கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுவிப்பதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னைக்கு சுமூகமான தீா்வை முன்னெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.