கோவை: கோவையை அடுத்த செட்டிபாளையம் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளுவா் தினத்தை ஒட்டி கோவை மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள், மதுபானக்கூடங்கள், மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுபானக்கூடங்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நாளில் மதுவிற்பனை செய்யும் நபா்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட முள்ளுக்காடு மதுபானக்கடை அருகே சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன் பேரில் அங்கு சென்ற போலீஸாா் மதுவிற்பனையில் ஈடுபட்டிருந்த தேவகோட்டையைச் சோ்ந்த கே.பிரபு (39), ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த எஸ்.சரவணன் (31) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா். தப்பிச் சென்ற மதுபானக்கூட உரிமையாளரான பழனிசாமி என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா். இவா்களிடமிருந்து 106 மதுபாட்டில்கள், ரூ.1,350 ரொக்கம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.