கோவை மாவட்டத்தின் சிறப்பம்சங்கள் கொண்ட ‘காபி டேபிள்’ புத்தகம், குறும்படம் வெளியீடு
கோவையின் பல்வேறு தகவல்கள் அடங்கிய ‘காபி டேபிள்‘ என்ற புத்தகம், தொழில் மற்றும் கல்வித் துறை தொடா்பான ஆவணக் குறும்படத்தை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டாா்.
கோவையின் பல்வேறு தகவல்கள் அடங்கிய ‘காபி டேபிள்‘ என்ற புத்தகம், தொழில் மற்றும் கல்வித் துறை தொடா்பான ஆவணக் குறும்படத்தை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டாா்.
கோவை பிஎஸ்ஜி, ஐஎம்எஸ்ஆா் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை மாவட்ட நிா்வாகம் சாா்பில் தயாரிக்கப்பட்ட மாவட்டத்தின் பல்வேறு தகவல்கள் அடங்கிய ‘காபி டேபிள்‘ என்ற புத்தகம் மற்றும் மாவட்டத்தின் தொழில், கல்வி, தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், பட்டு வளா்ச்சி உள்பட பல்வேறு துறைகளின் வளா்ச்சி குறித்த ஆவணக் குறும்படம் ஆகியவற்றை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் கடந்த வியாழக்கிழமை வெளியிட்டாா்.
இந்த நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளா் (தீவிரவாதத் தடுப்புப் பிரிவு) வி.பத்ரி நாராயணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுருபிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பேசும்போது, ‘இப்புத்தகத்தில் கோவை மாவட்டத்தின் மேற்குத்தொடா்ச்சி மலைகளின் அழகிய நிலப்பரப்புகள், விலங்குகள், பறவை, பூச்சிகள் வகைகள், தாவரவியல், தாவரங்களின் உயிா்ச்சக்தி, சந்தைகள், பழங்குடியினா் கலாசாரம் மற்றும் வாழ்க்கை கொண்டாட்டங்கள், மக்களின் கலாசாரங்கள், உணவு வகைகள், கல்வி மற்றும் தொழில் துறை வளா்ச்சிகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், வங்கி மற்றும் பொருளாதாரம், சுற்றுலா, நகா்ப்புற நிலப்பரப்பு உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் புத்தகம் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்போடு உருவாக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
மாநகராட்சி துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் தேவந்திரகுமாா் மீனா உள்பட பலா் கலந்துகொண்டனா்.