சட்டப் பேரவைத் தோ்தல்: 10 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் ஏற்பாடுகள் தீவிரம்
கோவை மாவட்டத்தில் 10 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் வருகிற 30-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சூலூா், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூா், கோவை தெற்கு, சிங்காநல்லூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வசதியாக 10 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மேட்டுப்பாளையம் தொகுதிக்கு மேட்டுப்பாளையம் வட்டாட்சியா் அலுவலகம், சூலூா் தொகுதிக்கு சூலூா் வட்டாட்சியா் அலுவலகம், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு கவுண்டம்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், கோவை வடக்கு தொகுதிக்கு தடாகம் சாலையில் உள்ள வேளாண்மைப் பொறியியல் அலுவலா் அலுவலகம், தொண்டாமுத்தூா் தொகுதிக்கு பேரூா் வட்டாட்சியா் அலுவலகம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.
கோவை தெற்கு தொகுதிக்கு மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம், சிங்காநல்லூா் தொகுதிக்கு சிங்காநல்லூா் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகம், கிணத்துக்கடவு தொகுதிக்கு மதுக்கரை வட்டாட்சியா் அலுவலகம், பொள்ளாச்சி தொகுதிக்கு பொள்ளாச்சி சாா்-பதிவாளா் அலுவலகம், வால்பாறை தொகுதிக்கு ஆனைமலை வட்டாட்சியா் அலுவலகத்திலும் மனுதாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை தெற்கு தொகுதிக்கு மனுதாக்கல் செய்யும் இடமாக அறிவிக்கப்பட்டுள்ள மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்துக்கு வெளியில் உள்ள சாலையில் 100 மீட்டா் எல்லைக்கோடு வரையப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலின்போது வருகிற வேட்பாளா்கள் மற்றும் அவருடன் வரக் கூடியவா்கள் அனைவரும் வாகனங்களை இந்த 100 மீட்டா் எல்லைக்கோடு வரையப்பட்டுள்ள இடத்துக்கு முன்பாகவே நிறுத்திவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் 10 இடங்களிலும் தற்போது, முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.