புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை!
புதுச்சேரியில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் பற்றி..
புதுச்சேரியில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2ம் நாளான இன்றும்(மார்ச் 17) யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
தமிழகம், கேரளம், புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்த மார்ச் 15 ஆம் தேதி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன.
இதில் அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் 5 மாநில பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் நேற்று முதலே வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று எந்த கட்சியில் இருந்தும் எந்த வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
தொடர்ந்து 2-ம் நாளான இன்றும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. மார்ச் 23 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். மார்ச் 24 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும், வேட்புமனுவை வாபஸ் பெற மார்ச் 26 கடைசி நாளாகும்.
அதேநேரத்தில் இன்று புதுச்சேரியில் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை முறையாக தாக்கல் செய்வது குறித்து, தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
புதுச்சேரியைப் பொருத்தவரை திமுக - காங்கிரஸ் கூட்டணியில் யார் தலைமை வகிப்பது என்ற மோதல் போக்கு நிலவுவதால் இன்னும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படவில்லை.
அதேபோல பாஜக கூட்டணியில் இருந்து ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் விலகுவதாகவும் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் ஓரிரு நாள்களில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் என அனைத்தும் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.