ஐபிஎல் 2026: மார்ச் 17 முதல் பயிற்சியைத் தொடங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்!
நடப்பு ஐபிஎல் சீசனுக்கான பயிற்சியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வருகிற மார்ச் 17 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனுக்கான பயிற்சியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வருகிற மார்ச் 17 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனுக்கான முதல் கட்ட போட்டி அட்டவணையை அண்மையில் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டது. அதன் படி, வருகிற மார்ச் 28 ஆம் தேதி நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் நடப்பு ஐபிஎல் சீசனுக்காக தயாராகி வருகின்றன.
இந்த நிலையில், வருகிற மார்ச் 17 ஆம் தேதி முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக அந்த அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்காக ராஜஸ்தான் அணி வீரர்கள் அனைவரும் ஜெய்பூருக்கு வரவுள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் இயக்குநராக செயல்பட்டு வரும் குமார் சங்ககாராவின் வழிகாட்டுதலில் வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். அணியில் உள்ள சக வீரர்களுடன் இணைந்து சிறப்பாக செயல்படுவதற்காக பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இதற்கு முன்பாக, சில வீரர்கள் மட்டும் பயிற்சிக்காக முகாமிட்டிருந்த நிலையில், வருகிற மார்ச் 17 ஆம் தேதி முதல் அணியில் உள்ள அனைவரும் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து டிரேடிங் முறையில் வாங்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் இருவரும் மற்ற வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.
எதிர்வரும் ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி குவாஹாட்டியில் வருகிற மார்ச் 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.