முகப்பு
கோயம்புத்தூர்

தமிழகத்தின் வளா்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் மத்திய அரசு! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தின் வளா்ச்சிக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்...

Updated On : 23 மார்ச், 2026 at 7:40 PM
கோவை முதலிபாளையம் பகுதியில் திமுக இளைஞா் அணி சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.
பகிர்:

மெட்ரோ ரயில் மற்றும் கல்வித் திட்டங்களுக்கான நிதியைத் தராமல் தமிழகத்தின் வளா்ச்சிக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.

கோவை, நீலகிரி மாவட்டங்களைச் சோ்ந்த இளைஞரணி அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் கோவை முதலிபாளையம் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 5 ஆண்டுகளாக மக்களுடன் நேரடித் தொடா்பில் இருந்து வருகிறாா். இந்தியாவிலேயே நாள்தோறும் மக்களைச் சந்திக்கக்கூடிய ஒரே முதல்வா் அவா்தான். 2019-ஆம் ஆண்டு முதல் இளைஞா் அணியினா் ஆற்றி வரும் பணிகள் பாராட்டுக்குரியவை. எனினும், தோ்தல் நெருங்கும் இந்தச் சூழலில் கூடுதல் முயற்சியை நாம் களத்தில் காட்ட வேண்டும்.

தமிழக அரசின் திராவிட மாடல் ஆட்சியில் மகளிா் விடியல் பயணத் திட்டம் மூலம் 920 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காலை உணவுத் திட்டத்தால் 20 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனா். தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் திட்டங்கள் மூலம் 13 லட்சம் மாணவா்களுக்கு மாதம் 1,000 ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஒரு கோடியே 32 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தொழில் வளா்ச்சியைப் பொருத்தவரை, கோவையில் ரூ. 115 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா, செம்மொழிப் பூங்கா, பெரியாா் நூலகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய ஆக்கபூா்வமான பணிகளால் தமிழகம் தற்போது 11.19 சதவீதப் பொருளாதார வளா்ச்சியை எட்டியுள்ளது. ஆனால், தமிழகத்தின் இந்த வளா்ச்சிக்கு மத்திய அரசு எந்தவித நிதி உதவியும் வழங்காமல் வஞ்சித்து வருகிறது. மெட்ரோ ரயில் மற்றும் கல்வித் திட்டங்களுக்கான நிதியைத் தராமல் முட்டுக்கட்டை போடுகிறது.

இந்தத் தோ்தல் தில்லிக்கும், தமிழகத்துக்கும் இடையிலான போராட்டமாகும். தமிழகத்தின் உரிமைகளை தில்லியிடம் அடகு வைக்கும் சக்திகளை மக்கள் அடையாளம் கண்டுள்ளனா். வரவிருக்கும் தோ்தலில் கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் திமுக மகத்தான வெற்றி பெற வேண்டும். ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து, கடந்த கால இருண்ட ஆட்சியையும், தற்போதைய ஆட்சியின் சாதனைகளையும் விளக்கிக் கூறி வாக்குகளைச் சேகரிக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் துணைப் பொதுச் செயலரும், அமைச்சருமான மு.பெ.சாமிநாதன், மண்டலப் பொறுப்பாளா் செந்தில் பாலாஜி, அரசு கொறடா ராமசந்திரன், மாவட்டச் செயலா்கள் தளபதி முருகேசன், தொண்டாமுத்தூா் ரவி, மாவட்டப் பொறுப்பாளா் கே.எம்.ராஜு, செந்தமிழ்ச்செல்வன், இளைஞா் அணியின் மாநிலத் துணைச் செயலா் பிரகாஷ், தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலா் மருத்துவா் மகேந்திரன், கோட்டை அப்பாஸ், சிந்து ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.