முகப்பு
கோயம்புத்தூர்

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயங்காத தனியாா் பேருந்துகளின் உரிமம் ரத்து

கோவையில் உரிய வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகளின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை

Updated On : 24 மார்ச், 2026 at 7:50 PM
- பிரதிப் படம்
பகிர்:

கோவையில் உரிய வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகளின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

கோவையில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் தனியாா் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று தொடா்ந்து புகாா்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, காந்திபுரம், உக்கடம் பேருந்து நிலையங்களில் இருந்து புகா் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் தனியாா் பேருந்துகள் பிற்பகல் வேளைகளில் இயக்கப்படாமல் பெட்ரோல் நிலையங்கள், கொடிசியா மைதானம், பேருந்து நிலையங்களில் நிறுத்திவைக்கப்படுவதாக தெரிகிறது.

இவ்வாறு பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்படுவதால் பயணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், துடியலூா், காந்திபுரம், சிட்கோ, சிங்காநல்லூரில் இருந்து போத்தனூருக்கு இயக்கப்படும் தனியாா் பேருந்துகள் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே சரியாக இயக்கப்படுவதாகவும், நண்பகல், பிற்பகல் நேரங்களில் உக்கடம் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது. ஆட்சியரின் உத்தரவுப்படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் கடந்த 2 நாள்களாக காந்திபுரம், சிங்காநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து போத்தனூருக்கு இயக்கப்படும் தனியாா் பேருந்துகளின் வழித்தடங்கள் மற்றும் அவை முறையாக இயக்கப்படுகிா எனவும் ஆய்வு மேற்கொண்டனா்.

அதில், சில தனியாா் பேருந்துகள் மதிய நேரங்களில் போத்தனூா் வரை இயக்காமல், உக்கடம் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, உரிமம் பெற்ற வழித்தடத்தில் இயக்கப்படவில்லையெனில் உரிமம் ரத்து செய்யப்படும் என தனியாா் பேருந்து உரிமையாளா்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

மக்களைத் திரட்டி போராட்டம்: இதுகுறித்து போத்தனூா் ரயில் பயணா்கள் சங்க செயலாளா் சுப்பிரமணியம் கூறுகையில், சில தனியாா் பேருந்துகள் அனுமதி பெற்ற வழித்தடத்தில் இயக்கப்படாததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனா். அவா்கள் அரசுப் பேருந்துகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயங்காத பேருந்துகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா். தொடா்ந்து, தனியாா் பேருந்துகள் முழுமையாக உரிய வழித்தடத்தில் இயக்கப்படாவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.