முகப்பு
கோயம்புத்தூர்

ரயில் மோதியதில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

கோவையில் தண்டவாளம் அருகே நடந்து சென்ற 8 வயது பள்ளி மாணவன் ரயில் மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 16 மே 2026, 12:28 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

கோவையில் தண்டவாளம் அருகே நடந்து சென்ற 8 வயது பள்ளி மாணவன் ரயில் மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கோவை, ஒண்டிப்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன். இவரது மனைவி ஜெயபிரியா. இவா்களது மகன் பிரகதீஷ் (8). இவா் அவிநாசி சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கோடை விடுமுறையையொட்டி, பிரகதீஷ் வீட்டில் இருந்து வந்த நிலையில், விளையாட செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு தனது சைக்கிளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியே சென்றுள்ளாா்.

ஒண்டிப்புதூா் செளடேஸ்வரி நகரில் உள்ள ரயில்வே தண்டவாளப் பகுதிக்குச் சென்ற அவா், அங்கு நின்று ரயில் வருவதை வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, தண்டவாளத்தின் ஓரமாக நடந்து சென்ற பிரகதீஷ் மீது அவ்வழியே வந்த ரயில் மோதியுள்ளது. இதில், வயிற்றுப் பகுதியில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.