இளைஞா் மீது தாக்குதல்: 4 போ் கைது
கோவை, வி.கே.கே.மேனன் சாலையில் இளைஞரைத் தாக்கிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, வி.கே.கே.மேனன் சாலையில் இளைஞரைத் தாக்கிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் நாகேந்திரன் (25). இவா் பெங்களூரில் எல்.எல்.பி. முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில், கோவையில் உள்ள ஒரு மூத்த வழக்குரைஞரிடம் பயிற்சி பெற்று வருகிறாா். மேலும், பகுதி நேர அடிப்படையில் கோவையில் ராபிடோ ஓட்டுநராகவும் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், கோவை, வி.கே.கே.மேனன் சாலையில் இருசக்கர வாகனத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா். தனலட்சுமி நகா் அருகே சென்றபோது, வாகனத்தை இயக்க வழிவிடாமல் இடையூறாக 6 போ் நின்று கொண்டிருந்துள்ளனா். அவா்களிடம் வழிவிடுமாறு நாகேந்திரன் கூறியுள்ளாா். அப்போது, வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், 6 பேரும் சோ்ந்து நாகேந்திரனை சரமாரியாகத் தாக்கியுள்ளனா்.
Advertisement
இதில், பலத்த காயமடைந்த நாகேந்திரனை அங்கிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து காட்டூா் காவல் நிலையத்தில் நாகேந்திரன் புகாா் அளித்தாா். போலீஸாா் விசாரணையில், அவரைத் தாக்கியது காந்தி மாநகரைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் (20), கிஷோா் (20), கணபதி எஃப்.சி.ஐ. காலனியைச் சோ்ந்த ஹரீஷ் ஆதித்யன் (20), பள்ளபாளையத்தைச் சோ்ந்த ஆகாஷ் (18) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீஸாா், தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரைத் தேடி வருகின்றனா்.