ஈரோடு

கருணை இருக்கும் இடத்தில் கடவுள் இருக்கிறார்: மலேசிய சொற்பொழிவாளர் பாண்டித்துரை

DIN

கருணை இருக்கும் இடத்தில் கடவுள் இருக்கிறார் என்று மலேசிய சொற்பொழிவாளர் சி.பாண்டித்துரை பேசினார்.
 ஈரோடு புத்தகத் திருவிழா சிந்தனை அரங்கில் "விருந்தாய் மருந்தாய் அருந்தமிழ்' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:
 இளமையில் வறுமை என்பது கொடுமையானது. விருந்தோம்பல் பண்பு என்பது தமிழர்களுக்கு உரித்தானது. எறும்புக்கு உணவு அளிக்க வேண்டும் என்பதற்காக, அரிசி மாவில் கோலம் போடுகிறோம். பெண்களைப் போற்றிப் புகழ்ந்து இலக்கியம் படைத்தவர்கள் தமிழர்கள். அதே நேரத்தில் பெண்களை அடிமைகளாக நடத்தியவர்களும் தமிழர்கள்தான்.
 இப்போது பல மனிதர்கள் தங்களைக் கடவுளாகப் பிரகடனப்படுத்தி வருகின்றனர். யார் கடவுள் என்பதற்கான வரையறையை மாணிக்கவாசகர் தெளிவாக விளக்கியுள்ளார். பிறப்பு, இறப்பு இல்லாதவர்தான் கடவுள். இறைவனை எதையும் கொண்டு தரிசிக்கலாம். சமயத்தைத் தெளிவாக புரிந்து கொண்டவர்கள் மூடநம்பிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள். உள்ளத்தில் அன்பு இல்லாமல், சுயநல வாழ்க்கை வாழ்ந்தால் முக்தி கிடைக்காது என்று திருநாவுக்கரசர் கூறுகிறார்.
அன்பு இல்லாத இதயத்தில் என்னதான் பூஜை, புனஸ்காரம் செய்தாலும், அங்கு ஆண்டவர் இருக்க மாட்டார். கடவுளுக்கு கருணைதான் உருவம். எங்கெல்லாம் கருணை இருக்கிறதோ அங்கு கடவுள் இருக்கிறார்.
கடவுளைப் பணம் கொடுத்து வாங்கிவிட முடியாது. ஈ, எறும்பின் மொழியைக் கூட அறிந்தவர் இறைவன். கடவுளுக்கு மொழி பேதம் கிடையாது. கடவுள் தாயைப் போன்றவர். அவரிடம் யாரும் நம்மை அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. ஆண்டவரை அணுக இடைத்தரகர்கள் தேவையில்லை.
மொழி மீது நமக்குப் பற்று வேண்டும். குடும்பங்களில் தமிழ் வளருங்கள். பெற்றோர்கள் உயிருடன் இருக்கும்போதே, அவர்களுக்கு சேவை செய்யுங்கள். அப்போதுதான் அவர்கள் மறைவுக்குப் பின் முழுமையான இன்பம் கிடைக்கும் என்றார்.
 இந்நிகழ்ச்சியில், மக்கள் சிந்தனைப்பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், எஸ்.எஸ்.எம். கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.எஸ்.மதிவாணன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலூா் அருகே காா் கவிழ்ந்ததில் பெண் பலி: கணவா் பலத்த காயம்

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

SCROLL FOR NEXT