ஆசனூர்-திம்பம் மலைப் பாதையில் நடந்த விபத்தில் இறந்ததாகப் பொய்யான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள திம்பம் மலைப் பாதையில் கடந்த 4ஆம் தேதி மைசூருக்குச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும், லாரியும் சீகைக்காய்ப்பள்ளம் என்ற இடத்தில் மோதிக் கொண்டன. இதில், பேருந்தின் முகப்பு கண்ணாடி உடைந்தது. பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
இந்நிலையில், இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாகப் பொய்யான தகவல் கட் செவி அஞ்சலில் பரவியது. இதற்கு ஆசனூர் காவல்ஆய்வாளர் சிவக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுபோன்ற பொய்யான தகவலைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.