ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கொடிநாள் விழாவில் முன்னாள் படைவீரர் நலத் துறை மூலம் 276 பயனாளிகளுக்கு ரூ. 18.66 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர், முன்னாள் ராணுவத்தினர், அவர்களைச் சார்ந்தோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:
முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் கொடிநாள் விழா ஆண்டுதோறும் டிசம்பர் 7-இல் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. முப்படைகளின் நலன் காக்க கொடிநாள் நிதி வசூல் மாவட்டம்தோறும் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே கொடிநாள் நிதி வசூலில் கடந்த 15 ஆண்டுகளாக முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 2016-ஆம் ஆண்டு கொடி நாள் நிதி வசூல் இலக்காக ரூ. 64.91 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு ரூ. 1 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டுக்கு கொடி நாள் வசூல் இலக்காக ரூ. 71.40 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்ற ஆண்டைப்போலவே நடப்பு ஆண்டிலும் இலக்கை விஞ்ச வேண்டும்.
டெக்ஸ்கோ மூலம் ஈரோடு மாவட்டத்தில் 160 முன்னாள் படைவீரர்கள் பணி வாய்ப்பும், நடப்பு ஆண்டில் 9 நபர்களுக்கு மாநில அரசுப் பணியும், 2 நபர்களுக்கு மத்திய அரசுப் பணியும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இதைத் தொடர்ந்து, முன்னாள் படைவீரர்கள், அவர்களைச் சார்ந்தோர் உள்பட 276 பயனாளிகளுக்கு ரூ. 18,66,793 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, கொடி நாள் வசூலை ஆட்சியர் தொடக்கிவைத்தார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர்ச.கவிதா, ஈரோடு மாநகராட்சி ஆணையர் மு.சீனி அஜ்மல்கான், முன்னாள் படைவீரர் நலத் துறை உதவி இயக்குநர் கணேசன், பிரிகேடியர் ஆர்.லோகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.