கடமையும், உரிமையும் நாணயத்தின் இரு பக்கங்கள்: ஸ்டாலின் குணசேகரன்
கடமையும், உரிமையும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்று மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் வலியுறுத்தினார்.
கடமையும், உரிமையும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்று மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் வலியுறுத்தினார்.
ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவை இணைந்து இக்கல்லூரியில் சனிக்கிழமை நடத்திய மாணவர்களுக்கான மனித உரிமைக் கருத்தரங்கில் அவர் பேசியதாவது:
ஐநா சபையில் 10.12.1948-இல் உலகளாவிய மனித உரிமை பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. இதுவே மனித உரிமை தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடமையும், உரிமையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டும். கடமையை சரிவர செய்பவர்களே உரிமையை உரத்தக் குரலில் கேட்கும் உரிமை பெற்றவர்கள் ஆகின்றனர்.
மேலிடத்தில் இருந்து தனக்கு கீழே பணி செய்பவர்கள் இடத்தில் கடமையை வலியுறுத்துபவர்கள் மேலும் மேலும் கடமையை மட்டுமே வலியுறுத்துகின்றனரே தவிர பணி செய்வபவர்களுக்கு இயல்பாகவே இருக்கிற உரிமைகள் குறித்து கண்டுகொள்வதில்லை. அதேபோல, உரிமைகளைத் தட்டிக் கேட்பவர்கள் தங்களுக்கு இருக்கும் கடமைகள் குறித்தும் கவலைப்படுவதில்லை. காவல் துறையினர் குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதை கடமையாகக் கொண்டவர்கள். அதன் மூலமாக நீதியை நிலைநாட்ட கடமைப்பட்டவர்கள்.
நிரபராதிகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதும் காவல் துறையின் கடமைகளில் ஒன்றாகும். சில காவல் துறை அதிகாரிகள் பொறுமையாகவும், நிதானமாகவும் மனிதநேயத்தோடும் அணுகி, எவ்வித சேதாரமும் இன்றி குற்றவாளிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர். இனிமேல் இந்த மாதிரியான அணுகுமுறைதான் அவசியம் என்றார்.
கருத்தரங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவகுமார் தொடக்கிவைத்தார். கல்லூரித் தலைவர் வெ.சண்முகன், செயலர்கள் நந்தகுமார் பிரதீப், திருமூர்த்தி, ஆலோசகர் விஸ்வநாதன், முதன்மைக் கல்வி அலுவலர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.