அந்தியூர் வனப் பகுதியில் மான் வேட்டையாட முயன்ற 8 பேர் கைது
அந்தியூர் வனப் பகுதியில் மான் வேட்டையாட முயன்ற 8 பேர் கொண்ட கும்பலை வனத் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.
அந்தியூர் வனப் பகுதியில் மான் வேட்டையாட முயன்ற 8 பேர் கொண்ட கும்பலை வனத் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். இவர்களிடமிருந்து, வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் கன்னி, 4 நாட்டுத் துப்பாக்கிகள், வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக - கர்நாடக எல்லையான பாலாறு பகுதியில் மான் வேட்டையாடும் சம்பவம் நடைபெறுவதாக சென்னம்பட்டி வனத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்து. இதையடுத்து, அடர்ந்த வனப் பகுதியில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தபோது ஒரு கும்பல் வனத் துறையினரைக் கண்டதும் தப்பியோட முயன்றது. அவர்களை சுற்றிவளைத்து வனத் துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள், சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (42), வாசன் (49), செல்வன் (50), செந்தில்குமார் (44), பாலு (46), சண்முகராஜா (43), பச்சியண்ணன் (26), ரமேஷ் (18) என்பது தெரிந்தது. மேலும், அவர்களிடமிருந்து மான் வேட்டைக்கு வைக்கப்படும் இரும்புக் கன்னி, 4 நாட்டுத் துப்பாக்கிகள், வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் மீது அனுமதியின்றி துப்பாக்கிகள் வைத்திருந்ததாக வெள்ளிதிருப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.