பவானி ஆற்றில் மூழ்கி 3 பெண்கள் சாவு
சத்தியமங்கலத்தில் பவானி ஆற்றில் குளித்தபோது பள்ளி மாணவி உள்பட 4 பெண்கள் நீரில் மூழ்கினர். இதில், 3 பெண்கள் உயிரிழந்தனர். ப
சத்தியமங்கலத்தில் பவானி ஆற்றில் குளித்தபோது பள்ளி மாணவி உள்பட 4 பெண்கள் நீரில் மூழ்கினர். இதில், 3 பெண்கள் உயிரிழந்தனர். பள்ளி மாணவியின் உடலைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உதகையைச் சேர்ந்தவர் பர்வீன் (33). அவரது மகள் ரகுமத்திஷா (18). இவர்களது உறவினர்கள் பத்ருநிஷா (25), கர்நாடக மாநிலம், குண்டல்பேட்டையைச் சேர்ந்த 7-ஆம் வகுப்பு மாணவி பிரதிஷா (12) ஆகியோர் சத்தியமங்கலம், தபால் அலுவலக வீதியில் உள்ள இதயத்துல்லா என்பவரின் வீட்டுக்கு திங்கள்கிழமை வந்துள்ளனர்.
இதில், ரகுமத்திஷா மனநலம் குன்றியவர். இவர்கள் அக்ரஹாரம் பவானி ஆற்றுக்கு குளிப்பதற்காகச் சென்றுள்ளனர். அப்போது, ரகுமத்திஷா ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கியுள்ளார். இதைப் பார்த்த அவரது தாய் பர்வீன் ஆற்றில் இறங்கி மகளைக் காப்பாற்ற முயன்றபோது அவரும் நீரில் மூழ்கியுள்ளார். அதிர்ச்சியடைந்த பிரதிஷாவும், பக்ருநிஷாவும் அவர்களைக் காப்பாற்றச் சென்றபோது நீரில் மூழ்கினர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ரகுமத்திஷா, பத்ருநிஷா, பர்வீன் ஆகியோரின் உடல்களை மீட்டனர்.
தொடர்ந்து, பள்ளி மாணவி பிரதிஷாவைத் தேடும் பணியில் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) ஆர்.ஈஸ்வரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.