கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி, மகுடேஸ்வரர் கோயில் வளாகத்தில் பரத நாட்டிய நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மகா சிவராத்திரியையொட்டி மும்மூர்த்திகள் ஸ்தலமான கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு அலங்காரங்கள், ஆராதனைகள் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு கரூர் ஆடல் வல்லான் நாட்டியாலயா குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சி அரங்கேற்றம் நடைபெற்றது.
தொடர்ந்து, மகுடேஸ்வரருக்கு முதல்கால பூஜை, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை, நான்காம் கால பூஜை என இரவு முழுவதும் சிவராத்திரி பூஜைகள் நடைபெறவுள்ளன. இரவு முழுவதும் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவிந்துள்ளனர்.
சிவகிரி வேலாயுதசாமி கோயிலில் 1,008 சிவலிங்க பூஜை நடைபெற்றது. மேலும், கொடுமுடி வட்டாரத்தில் உள்ள சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி பூஜைகள் இரவு முழுவதும் நடைபெற்றன.