கோபி வட்டாரத்தில் மழைத் தூவுவான் கருவிக்கு ரூ. 36 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என வேளாண் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி கூறியதாவது:
மானிய விலையில் அமைக்கப்படும் சொட்டுநீர்ப் பாசனக் கருவிகளுக்கு ஜி.எஸ்.டி. வரி இல்லாததால் சொட்டு நீர்ப் பாசனக் கருவிகளுக்கு ஆகும் மொத்த செலவு குறைந்துள்ளது. தற்போது, மீண்டும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளதால் அனைத்து விவசாயிகளும், அனைத்துப் பயிர்களுக்கும் சொட்டுநீர், தெளிப்பு நீர்க் கருவிகளை மானியத்தில் அமைத்துக் கொள்வது சிறந்ததாகும்.
வேளாண்மைத் துறை மூலம் பாசன நீரை சிக்கனமாய் பயன்படுத்த வழிவகை செய்யும் கருவிகள் விவசாயிகளுக்கு தாமதமின்றி அமைத்துத் தரப்பட்டு வருகிறது. சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் ஆன விவசாயிகள் மீண்டும் புதியதாக அமைத்தால் அவைகளுக்கும் மானியம் வழங்கப்படும். சிறு, குறு விவசாயிகளுக்கு ரெயின்கள் எனும் மழைத் தூவுவான் கருவிக்கு ரூ. 36,176 வரையிலும், ஸ்பிரிங்லர்
எனும் தெளிப்பு நீர்ப் பாசனக் கருவிகளுக்கு ரூ. 20,866 வரையிலும் மானியம் வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் மேற்கண்ட கருவிகள் வழங்கப்படுகின்றன.
கோபி வட்டாரத்தில் 700 ஏக்கர் பரப்பளவுக்கு சொட்டு நீர் தெளிப்பு நீர்ப் பாசனங்கள் அமைப்பதற்கு மானிய இலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள்இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வரும் வறட்சிப் பருவத்தை சமாளிக்கலாம்.
மேலும், விவரங்களுக்கு கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.