பவானியில் நடைபெற்ற சிறப்பு மனு நீதி நாள் முகாமில் 84 பயனாளிகளுக்கு ரூ. 39.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். திருப்பூர் மக்களவை உறுப்பினர் வி.சத்யபாமா, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ், கோபி கோட்டாட்சியர் எஸ்.கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்ற சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், 84 பயனாளிகளுக்கு ரூ.39.60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 39 பேருக்கு ரூ. 27.50 லட்சம் மதிப்பில் பயிர்க் கடன், கறவை மாடு, இதர கடன்களும், 10 பேருக்கு ரூ. 8.10 லட்சம் மதிப்பில் மத்திய கால கடன்கள் உள்பட 84 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில், பவானி சட்டப் பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் பி.ஜி.நாராயணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின நல அலுவலர் புகழேந்தி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீ.குமார், மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலர் அ.அழகிரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.