மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆனந்தம்பாளையம், கஸ்பாபேட்டை, கணபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் சுகாதார விழிப்புணர்வுக் கலைநிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் சுகாதாரம் பேணும் நோக்கில் ஆனந்தம்பாளையம் ஊராட்சி, கரியாக்கவுண்டன்வலசு அரசுத் தொடக்கப்பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள், பொது மக்கள் பங்கேற்ற விழிப்புணர்வுக் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், அந்தியூர் செம்பருத்தி கலைக்குழுவினர் பங்கேற்று பொது மக்களிடையே தன் சுத்தம் பேணுதல், கழிப்பறை பயன்பாட்டின் அவசியம், திடக்கழிவு, திரவக் கழிவுகைள அகற்றுதல், சுகாதாரம் இல்லாமையால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் நாடகம், பாட்டு மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சியில் ஆனந்தம்பாளையம் ஊராட்சி செயலாளர் கீதாரஞ்சனி, அரசுத் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை வசுந்தராதேவி, வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, பல்வேறு ஊராட்சிகளில் மார்ச் 17-ஆம் தேதி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக கலைக்குழுவினர் தெரிவித்தனர்.