திமுக மண்டல மாநாடு மொபைல் கழிவறைகள் கிராம மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைப்பு
திமுக மண்டல மாநாட்டில் பயன்படுத்தப்பட்ட கழிவறைகள் கிராம் மக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டன.
திமுக மண்டல மாநாட்டில் பயன்படுத்தப்பட்ட கழிவறைகள் கிராம் மக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் மார்ச் 24, 25-ஆம் தேதிகளில் திமுக மண்டல மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில், அடிப்படை வசதிகளான குடிநீர், உணவு, கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக, கழிப்பறை வசதிக்காக 60-க்கும் மேற்பட்ட மொபைல் கழிப்பறைகள், நவீன முறையில் புதிதாகத் தயாரிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டன. மாநாடு முடிந்த பின்னர், அந்த மொபைல் கழிவறைகள், கழிவறை வசதி இல்லாத கிராமங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என கட்சியின் செயல் தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதேபோல, மாநாட்டில் நடப்பட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி கொடிக் கம்பங்களையும், அனைத்து கிராமங்களிலும் அமைத்து, அந்தந்த ஊராட்சி செயலாளர் மூலமாகப் பராமரிக்கப்படும் எனவும் அறிவித்தார்.
அதன் அடிப்படையில், முதல்கட்டமாக, பெருந்துறை ஒன்றியத்தில் இதுவரை பொதுக்கழிப்பிட வசதி செய்யப்படாமல் உள்ள பாரதி நகர் கிராமத்துக்கு நான்கு கழிவறைகள் வழங்கப்பட்டன. அதற்கு தண்ணீர் வசதியும் செய்யப்பட்டது.
இந்நிலையில், கிராமங்களுக்கு கழிவறைகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பெருந்துறை ஒன்றியச் செயலாளர் கே.பி.சாமி தலைமை வகித்தார். மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவரும், ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளருமான முத்துசாமி பங்கேற்று, பாரதி நகரில் அமைக்கப்பட்ட கொடிக் கம்பத்தில் திமுக கொடியேற்றினார். பின்னர், கழிவறைகளைப் பொதுமக்களுக்கு ஒப்படைத்தார்.
இதில், கட்சியின் சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர் கந்தசாமி, மாநில நெசவாளர் அணிச் செயலாளர் சச்சிதானந்தம், கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் சந்திரகுமார், மாநில ஆதி திராவிடர் நலக்குழுத் தலைவர் அந்தியூர் செல்வராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் குமாரசாமி, மாவட்டப் பொருளாளர் பி.கே.பழனிசாமி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.