பண்ணாரி அம்மன் கோயிலில் கம்பம் சாட்டும் விழா
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் கம்பம் சாட்டும் விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் கம்பம் சாட்டும் விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
அருள்மிகு பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, மார்ச் 20- ஆம் தேதி முதல் கோயிலைச் சுற்றியுள்ள கிராமங்களில் பண்ணாரி அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, திருக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. இதில், சிக்கரசம்பாளையம் புதூர், வெள்ளியம்பாளையம் புதூர் மற்றும் காளிதிம்பம் மலைவாழ் மக்கள் கலந்துகொண்டனர். கோயில் முன்பு உள்ள பிள்ளையார், முருகன், வனதேவதைகள் சருகு மாரியம்மன், மாதேஸ்வரன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்புப் பூஜைகள் செய்து அக்னி குழிக்கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அக்னி குழிக்கம்பத்தில் இருந்து எழுந்த தீப்பிழம்பைச் சுற்றியபடி மலைவாழ் மக்கள் தாரை, தப்பட்டை வாத்தியங்களுடன் அம்மன் புகழ்பாடும் களியாட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து, ஏப்ரல் 1-ஆம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். ஏப்ரல் 2-ஆம் தேதி அம்மன் அழைப்பும், விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் நிகழ்ச்சி ஏப்ரல் 3-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.