ராஜஸ்தான் பல்கலை.யில் அட்டகாசம்: கண்ணில் படுவோரை கடித்து குதறும் அணில்!
ராஜஸ்தானில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் உள்பட 20 பேரை அணில் ஒன்று அடுத்தடுத்து கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் உள்பட 20 பேரை அணில் ஒன்று அடுத்தடுத்து கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் மோகன்லால் சுகாதியா பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் சுற்றித்திரியும் அணில் ஒன்று கடந்த சில நாட்களாக அவ்வழியே செல்வோரை கடித்து வருவதாக தகவல்கள் தெரிய வந்துள்ளன.
பேராசிரியர்கள், மாணவர்கள் என கண்ணில் பட்டவர்களை எல்லாம் அந்த அணில் கடித்து வருவதால் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பதற்றம் நிலவுகிறது. கடந்த ஆறு வாரங்களில் மட்டும் இதுவரை 20 பேரை அணில் கடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அந்த அணிலை கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியில் வனத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
ஆனால் அணிலைப் பிடிப்பது சவாலாக உள்ளது. அதன் செயல்பாடு கணிக்க முடியாததாக இருப்பதாக மாணவர்களும் ஊழியர்களும் கூறியுள்ளனர். இதனிடையே அணிலைக் கண்டால் உடனடியாகத் தகவல் தெரிவிப்பது அவசியம் என இணை வேந்தர் நவீன் நவனா தெரிவித்துள்ளார். மேலும் அணில் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் பாதுகாப்பு நடவடிக்கையாக டெட்டனஸ் ஊசிகள் போடப்பட்டுள்ளன.
இதனிடையே அணிலைப் பிடிப்பதற்கான முயற்சிகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நிலைமை விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். அணிலின் இந்த ஆக்ரோஷத்திற்குப் பின்னால் வெப்பநிலை ஒரு காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். அதிக வெப்பநிலை சிறிய விலங்குகளுக்கு மன அழுத்தத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது.
அதேசமயம் நீண்ட நேர பசி, அவை கடிக்க முற்படும் தன்மையை மேலும் அதிகரிக்கக்கூடும்.