பவானிசாகர் அணையில் மணல் திருட்டைத் தடுக்கக் கோரிக்கை
பவானிசாகர் அணையில் விதிகளுக்குப் புறம்பாக மணல் திருட்டு நடைபெற்று வருவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயத் தொழிலாளர்கள் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.
பவானிசாகர் அணையில் விதிகளுக்குப் புறம்பாக மணல் திருட்டு நடைபெற்று வருவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயத் தொழிலாளர்கள் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.
ஈரோடு அருகே நசியனூரில் மாவட்டத் தலைவர் வி.ஆர்.மாணிக்கம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட 6-ஆவது மாவட்ட மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநிலக் குழு உறுப்பினர் கே.சண்முகவள்ளி, மாவட்டச் செயலாளர் ஆர்.விஜயராகவன், மாவட்ட உதவித் தலைவர் எம்.நாச்சிமுத்து ஆகியோர் தீர்மானங்களை விளக்கிப் பேசினர்.விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர் சிறப்புரையாற்றினார்.
மாநாட்டில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
வீடுகளின்றி வசித்து வரும் விவசாயத் தொழிலாளர்களுக்கு வீட்டுமனைப் பட்டாவுடன் வீடு வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார மையங்கள், மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு உயர் சிகிச்சை வழங்கும் வகையில் பரிசோதனைக் கருவிகள், சிறப்பு மருத்துவர்கள், தரமான மருந்துகள் போன்றவற்றை வழங்க வேண்டும். பவானிசாகர் அணையில் சட்டப் பேரவை உறுப்பினர் ஈஸ்வரன் தலைமையில் விதிகளுக்குப் புறம்பாக 10 முதல் 20 அடிக்கும் மேலாக செம்மண், நைஸ் மணல் போன்ற இயற்கை வளங்களைச் சுரண்டுவது தடுக்கப்பட வேண்டும். ரேஷன் கடைகளில் அனைத்து நாள்களிலும், அனைத்துப் பொருள்களும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தனிநபர் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்க வேண்டும். ஈரோடு மாவட்டம் முழுவதும் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாள்களுக்கு உயர்த்தியும், தினக் கூலியை ரூ. 400 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். முதியோர் உதவித் தொகை கேட்டு விண்ணபித்த தகுதியானவர்களுக்கு உடனே வழங்க வேண்டும். அதன் தொகையை ஆயிரம் என்பதை ரூ. 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையொட்டி நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வில், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவராக ஆர்.விஜயராகவன், செயலாளராக கே.சண்முகவள்ளி, பொருளாளராக என்.நாகராஜன் உள்பட 25 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டனர்.