பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சுமார் 85 வயதுள்ள மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டார்.
பவானி கூடுதுறைப் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வந்த மூதாட்டி, காவிரிக்கரை படிக்கட்டில் நீண்ட நேரமாக அமர்ந்திருந்தார். அப்போது, லேசாக மழை பெய்யத் தொடங்கியதால் பக்தர்கள் பரிகார மண்டபத்துக்குள் நின்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில், அவர் திடீரென காவிரி ஆற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்ட பக்தர்கள் கூச்சலிட்டனர். விரைந்து சென்ற பக்தர்களில் ஒருவர் தண்ணீரில் மூழ்கித் தத்தளித்த மூதாட்டியை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தார். விசாரணையில் அவர், சேலம் மாவட்டம், ஜலகண்டபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், கணவர் இறந்த நிலையில், மகன்கள், மகள்களும் கைவிட்டதால் ஆதரவற்ற நிலையில் தற்கொலை முடிவுக்கு வந்ததாகவும் கூறியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மூதாட்டியை அழைத்துச் சென்றனர். இதனால், கூடுதுறை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.