ஈரோட்டில் கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழா
ஈரோட்டில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஈரோட்டில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு, திண்டல் யு.ஆர்.சி.பள்ளி மைதானத்தில் பிற்பகலில் தூப ஆரத்தியுடன் தொடங்கி, ஹரிநாம சங்கீர்த்தனம், கிருஷ்ண கதா உபன்யாசம், துளசி ஆரத்தி, சந்தியா ஆரத்தி, மஹா அபிஷேகம், மஹா ஆரத்தி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் பங்கேற்ற கிருஷ்ண பக்தி இயக்கத்தைச் சேர்ந்தோர், பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள், ஹரிநாம சங்கீர்த்தனங்கள் பாடி வழிபட்டனர். முன்னதாக விழா மண்டபத்தில் ராதா கிருஷ்ணன், புரி ஜெகந்நாதர், சுபத்ரா, பலராமர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து விளக்கேற்றி வழிபட்டனர்.
கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு நடைபெற்ற ஓவியப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர் 40 பேருக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன. ஏ.ஈ.டி. பள்ளி முதல்வர் முருகசாமி, இஸ்கான் அமைப்பின் ஈரோடு தலைவர் சத்புஜாபிரபு ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
விழாவில், ஈரோடு, திண்டல், வில்லரசம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.