கோபிசெட்டிபாளையத்தில் ஆதிபராசக்தி கஞ்சிக்கலய ஊர்வலம்
கோபிசெட்டிபாளையம், புதுப்பாளையத்தில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 9ஆம் ஆண்டு
கோபிசெட்டிபாளையம், புதுப்பாளையத்தில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 9ஆம் ஆண்டு ஆடிப்பூரப் பெருவிழா நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கஞ்சிக்கலயம் ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.
ஆடிப் பெருவிழா கடந்த 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 1ஆம் தேதி குருபூஜை, கலச விளக்கு பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான கஞ்சிக்கலய ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை கோபி காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்வம் தொடங்கி வைத்தார்.
ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் தொடங்கிய ஊர்வலம் கச்சேரிமேடு, பெரியார் திடல், கடைவீதி, பேருந்து நிலையம் வழியாக புதுப்பாளையத்தில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை அடைந்தது.
இதைத் தொடர்ந்து ஆதி பராசக்தி சித்தர் பீட ஆண்டு விழா, மழைவளம் வேண்டி கலசவிளக்கு, வேள்விபூஜை, கஞ்சிவார்ப்பு, பாலாபிஷேகம், அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. விழாவில் இளைஞர் அணித் தலைவர் ராமபிரசாத், வேலுசாமி, அருளானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.