100 அடி கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி உயிருடன் மீட்பு
சத்தியமங்கலம் அருகே 100 அடி கிணற்றில் தவறி விழுந்த கன்றுக்குட்டியை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
சத்தியமங்கலம் அருகே 100 அடி கிணற்றில் தவறி விழுந்த கன்றுக்குட்டியை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
சத்தியமங்கலத்தை அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி, செல்லிபாளையத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது தோட்டத்தில் 100 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. இக்கிணற்றில் பாதுகாப்பு சுற்றுச்சுவர் ஏதுமின்றி தரைமட்டமாக உள்ளது.
பொன்னுசாமி தோட்டத்தில் வளர்க்கப்பட்ட பசு மாடு கன்று ஈன்றுள்ளது. இந்தக் கன்று தோட்டத்தை ஒட்டியுள்ள கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.
சுமார் 100 அடி ஆழமுள்ள கிணற்றில் 10 அடி அளவு தண்ணீர் இருந்ததால் கன்றுக்குட்டி நீரில் தத்தளித்தது. இதைப் பார்த்த பொன்னுசாமி, தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார்.
தீயணைப்பு நிலைய வீரர்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி கன்றுக்குட்டியை பத்திரமாக மீட்டனர். கன்றுக்குட்டி 5 மணி நேரத்துக்கும் மேலாக தண்ணீரில் நின்றதால் குளிரில் நடுங்கியது. தொடர்ந்து, கன்றின் உடலில் சூடேற்றி சிகிச்சை அளித்தனர்.