அறச்சலூர் அருகே இரு அரசுப் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் பயணி ஒருவர் உயிரிழந்தார்; 6 பயணிகள் படுகாயமடைந்தனர்.
சேலத்திலிருந்து கொடைக்கானல் நோக்கி ஒரு அரசுப் பேருந்தும், பழநியிலிருந்து அந்தியூர் நோக்கி ஒரு அரசுப் பேருந்தும் திங்கள்கிழமை காலை சென்று கொண்டிருந்தன.
அறச்சலூர் அருகிலுள்ள வெள்ளகவுண்டன்வலசு என்ற இடத்தில் வரும்போது, இரு பேருந்துகளும் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் காங்கயம் பகுதியைச் சேர்ந்த கெளசிக் (34) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இரு பேருந்துகளிலும் பயணம் செய்த அறச்சலூரைச் சேர்ந்த தீபக் (27), பிரேம்குமார் (17), செந்தில் (43), குமாரசாமி (43), யுவராஜ், சந்திரசேகர் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் ஈரோடு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து அறச்சலூர் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.