வனத்தில் தீ விபத்து ஏற்படுத்தினால் குண்டம் சட்டம் பாயும் என வனத் துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து வனத் துறையினர் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வனப் பகுதிகளில் தொடர்ந்து தீ விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. இதில் பெரும்பாலானவை அப்பகுதி மக்களால் ஏற்படுவதாகத் தெரியவருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 2 லட்சத்து 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் காடுகள் உள்ளன. அந்தியூர், பர்கூர், சென்னம்பட்டி, பவானிசாகர், சத்தியமங்கலம், தாளவாடி, கடம்பூர், ஆசனூர் ஆகிய பகுதிகளில் காடுகள் அதிகமாக காணப்படுகின்றன.
இந்தப் பகுதிகளில் உள்ள கிராம மக்கள் வனப் பகுதிக்குள் ஆடு, மாடுகள் மேய்ப்பதற்க்காகவும், சிறு வனப் பொருள்கள், தேன் சேகரிப்பதற்காகவும் செல்லும்போது வனப் பகுதியில் தீ வைத்து வருவதாகத் தெரியவருகிறது.
இது சம்பந்தமாக தீ தவிர்ப்பு விழிப்புணர்வுக் கூட்டங்கள் வனத் துறையின் மூலமாக நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் தொடர்ந்து வனப் பகுதிக்குள் தீ விபத்துகள் நிகழ்ந்து வருவதால் வனத்துக்கும் வனவிலங்குகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும்.
இந்த வனப் பகுதிகளில் உற்பத்தியாகும் பவானி, மாயாறு ஆகியவற்றின் நீர்வளம் இதுபோன்ற தீ விபத்துகள் நடைபெறுவதால் பெரிதும் பாதிக்கப்படும். எனவே யாரும் வனப் பகுதியில் தீ வைக்கும் செயலில் ஈடுபட வேண்டாம்.
அத்துமீறி தீ வைப்பவர்கள் யாரேனும் கண்டறியப்பட்டு பிடிக்கப்பட்டால் அவர்களின் மீது குண்டர் சட்டத்தின் மூலம் கடுமையான தண்டனை அளிக்கப்படும் என்றனர்.