சென்னிமலையை அடுத்த, சொக்கநாதபாளையம், செல்வசக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு புதிதாக கோபுரம் அமைக்கப்பட்டது.
இதற்கான கும்பாபிஷேக விழா சனிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி, லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து, சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோயிலில் இருந்து தீர்த்தம் மற்றும் முளைப்பாரி எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து, கோபுரக் கலசம் வைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜை ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி, நாடி சந்தானம், பூர்ணாகுதி, கலசங்கள் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, செல்வசக்தி விநாயகர், ஆதி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், தசதானம், தசதரிசனம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன.
இதில் சொக்கநாதபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.