7.11 லட்சம் குடும்பங்களுக்குப் பொங்கல் பரிசு
ஈரோடு மாவட்டத்தில் 7.11 லட்சம் குடும்பங்களுக்குப் பொங்கல் பரிசாக ரூ. 2,500 பணம், பொருள்கள் வழங்கப்படவுள்ளன. குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் விநியோகம் சனிக்கிழமை தொடங்கியது.
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 7.11 லட்சம் குடும்பங்களுக்குப் பொங்கல் பரிசாக ரூ. 2,500 பணம், பொருள்கள் வழங்கப்படவுள்ளன. குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் விநியோகம் சனிக்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகளில் அரிசி வாங்கும் தகுதியுடைய குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2,500 பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.
ஈரோடு மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைகள் கொண்ட குடும்ப அட்டைகள் 7 லட்சத்து 10 ஆயிரத்து 966 உள்ளன. இந்த அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ. 2,500 பொங்கல் பரிசு வழங்கப்படவுள்ளது.
பொங்கல் பரிசை சிரமமின்றி பொதுமக்கள் பெறுவதற்கு வசதியாக அந்தந்த நியாயவிலைக் கடைகள் மூலம் டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சனிக்கிழமை முதல் டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது.
அதில் எந்த நாளில் பொதுமக்கள் நியாயவிலைக் கடைக்கு வந்து தங்களுக்கு உரிய தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஜனவரி 4 முதல் 13ஆம் தேதி வரை குறிப்பிட்ட தேதியில் ரூ. 2,500 பணம், பொங்கல் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம்.