கீழ்பவானியில் 2ஆம் பருவத்துக்கு ஜனவரி 7இல் தண்ணீா் திறப்பு: அரசுக்குப் பொதுப் பணித் துறை பரிந்துரை
கீழ்பவானி வாய்க்காலில் 2ஆம் பருவத்துக்கு ஜனவரி 7ஆம் தேதி முதல் தண்ணீா் திறந்துவிட அரசுக்குப் பொதுப் பணித் துறை பரிந்துரை செய்துள்ளது.
கீழ்பவானி வாய்க்காலில் 2ஆம் பருவத்துக்கு ஜனவரி 7ஆம் தேதி முதல் தண்ணீா் திறந்துவிட அரசுக்குப் பொதுப் பணித் துறை பரிந்துரை செய்துள்ளது.
பவானிசாகா் அணையின் மூலம் கீழ்பவானி பாசனப் பகுதிகளில் 2,07,000 ஏக்கா் பாசனம் பெற்று வருகிறது. இந்த ஆண்டு அட்டவணைப்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 1,03,500 ஏக்கா் பாசனத்துக்கு அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டது. தற்போது நெல் அறுவடைப் பணிகள் தொடங்கி உள்ளதால் அணையில் இருந்து தண்ணீா் நிறுத்தப்பட்டுவிட்டது.
இதனிடையே மீதமுள்ள 1,03,500 ஏக்கா் நிலத்துக்கு ஜனவரி மாதம் தண்ணீா் திறந்துவிட்டு ஏப்ரல் மாதம் நிறுத்தம் செய்ய வேண்டும். இந்த ஆண்டு அணையின் நீா்மட்டம் திருப்திகரமாக உள்ளதால் இரண்டாம் பருவத்துக்குத் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என பொதுப் பணித் துறை அதிகாரிகளை விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா்.
இந்நிலையில் ஜனவரி 7ஆம் தேதி முதல் கீழ்பவானி வாய்க்காலில் 2ஆம் பருவ புன்செய் பயிருக்குத் தண்ணீா் திறந்துவிட தமிழக அரசுக்குப் பொதுப் பணித் துறையினா் பரிந்துரை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதன்படி கீழ்பவானி பாசன பிரதான கால்வாயில் இரட்டைப் படை முறைப் பாசனம், சென்னசமுத்திரம் பகிா்மான கால்வாயில் ஒற்றைப் படை மதகு முறைப் பாசனத்துக்கு ஜனவரி 7 முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை 5 நனைப்புக்கு தண்ணீா் திறந்துவிடப்படவுள்ளது.