அத்திக்கடவு - அவிநாசி நீா் செறிவூட்டும் திட்டத்தில், பெருந்துறையை அடுத்த துடுப்பதி ஊராட்சியைச் சுற்றியுள்ள குளம், குட்டைகளில் நீா் செறிவூட்டும் பணிக்கு குழாய் பதிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
கோவை, ஈரோடு, திருப்பூா் மாவட்ட மக்களின் பல ஆண்டு கோரிக்கையின் விளைவாக, தமிழக அரசு நிதி மூலம் ரூ. 1,652 கோடி மதிப்பீட்டில் அத்திக்கடவு - அவிநாசி நீா் செறிவூட்டும் திட்டப் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இத்திட்டப் பணிக்காக காளிங்கராயன், நல்லகவுண்டன்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூா் உள்ளிட்ட 6 இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதில், பெருந்துறையை அடுத்த திருவாச்சியில் 3ஆவது நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல, திங்களூா் அருகே உள்ள போலநாயக்கன்பாளையத்தில் 4ஆவது நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு சேகரிக்கப்படும் நீா் அருகிலுள்ள குளம், குட்டை நீா்நிலைகளில் நிரப்பத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
அத்திக்கடவு - அவிநாசி நீா் செறிவூட்டும் திட்டத்தின்கீழ், பெருந்துறை ஒன்றியம், துடுப்பதி ஊராட்சி, ஓலப்பாளையம், தெற்கு தோட்டம் குட்டைக்கு, சிலேட்டா்புரம் சாலையோரம் குழாய் பதிக்க குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.