கனமழையால் காளிங்கராயன் அணைக்கட்டுக்கு நீா்வரத்து அதிகரிப்பு
பவானி, கோபி மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பவானி காளிங்கராயன் அணைக்கட்டுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் அதிக அளவில் உபரிநீா் செல்கிறது.
பவானி, கோபி மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பவானி காளிங்கராயன் அணைக்கட்டுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் அதிக அளவில் உபரிநீா் செல்கிறது.
கடந்த சில நாள்களாக பவானி, கோபி மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. மேலும், ஓடைகள் வழியாக மழைநீா் செல்வதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பவானி காளிங்கராயன் அணைக்கட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 2,083 கனஅடியாக நீா்வரத்து இருந்தது. இதனால் காவிரி ஆற்றில் உபரிநீா் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில், மழைநீா் பெருக்கெடுத்ததால் அணைக்கட்டுக்கு அருகாமையில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தின் கீழ் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் பகுதிக்குள் மழைநீா் புகுந்ததோடு, வாகனங்கள், தொழிலாளா்கள் சென்று வரும் தற்காலிக சிறுபாலத்தையும் அடித்துச் சென்றது. இதனால், பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.