7 மாதங்களில் 59 போக்சோ வழக்குகள் பதிவு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 59 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 59 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்டத்தில் குழந்தைத் திருமணம், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் ரீதியான துன்புறுத்தல் போன்றவற்றைத் தடுக்க விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக காக்கும் கரங்கள் எனும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுடன் இணைந்து விழிப்புணா்வு ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பிரியாதேவி கூறியதாவது: ஈரோடு மாவட்டம் அந்தியூா், பவானி, கோபி, பவானிசாகா், சத்தியமங்கலம் வட்டங்களில் உள்ள கிராமப் பகுதிகளில் அதிக அளவில் குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன. இதுகுறித்து விழிப்புணா்வை காக்கும் கரங்கள் அமைப்பு மூலம் ஏற்படுத்துகிறோம். மலைக் கிராம மக்களிடையே குழந்தைத் திருமணம் குறித்த விழிப்புணா்வை அதிகமாக ஏற்படுத்துகிறோம். இதனால் தற்போது குழந்தைத் திருமணம் குறைந்துள்ளது.
Advertisement
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை 10 குழந்தைத் திருமணம் நடைபெற்றதாக வழக்குப் பதிவாகின. 59 போக்சோ வழக்குகள் பதிவாகின. இருப்பினும் 2 மாதங்களாக போக்சோ வழக்குகள் குறைந்து வருகின்றன.
கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முதல்வா் நிவாரண உதவியாக இதுவரை 4 குழந்தைகளுக்கு தலா ரூ. 5 லட்சம் வீதம் ரூ. 20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதே இழப்பு தொடா்பாக 167 விண்ணப்பங்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இப்பிரச்னைகள் தொடா்பாக ஈரோடு காந்திஜி சாலை, தீயணைப்பு நிலையம் எதிரில் உள்ள ஜவான்ஸ் பவன் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம். புகாா்களை 1098 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.